மார்கழி மாதம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன... மார்கழியின் சிறப்புகள் என்ன?
![]() |
மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது.
தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.
மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.
மார்கழி மாதம் சிறப்புகள்
சிறப்பு பெயர்
மார்கழி மாதத்திற்கு தனுர் மாதம் என்ற பெயரும் உண்டு. சைவர்கள் இம்மாதத்தை தேவர் மாதம் என்றும் குறிப்பிடுவர்.
தெய்வ வழிபாட்டுக்கு உகந்த மாதம்
மார்கழி மாதமானது தெய்வீகம் தவளக் கூடிய மாதமாகும். இம் மாதத்தில் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டால் அவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். மேலும் மார்கழி மாதத்தை இறை வழிபாட்டிற்குரிய அற்புதமான மாதமாக ஆன்மீகம் குறிப்பிடுகின்றது.
பிராண வாயு
பிரபஞ்சத்தில் மார்கழி மாதத்தில் தான் ஆக்சிஜன் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மார்கழி மாதத்தில் ஓசோன் படலத்திலிருந்து வரும் சுத்தமான காற்றைப் போல் வேறெந்த மாதத்திலும் கிடைப்பதில்லை. அதனால் தான் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போடுமாறு முன்னோர்கள் வழிவகுத்து சென்றுள்ளனர்.
தானம்
இம்மாதத்தில் செய்யும் எந்த ஒரு தானமும் நமக்கு பெரும் பாக்கியத்தைச் சேர்க்கும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. மார்கழி மாதத்தில் தானம் செய்வதும் பாவங்களை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் என்பது ஜோதிட நம்பிக்கை. இம்மாதத்தில் கம்பளி போன்றவற்றை தானம் கொடுப்பது சிறந்ததாகும்.
வருடம் முழுவதும் பலன்
மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஒருநாள் இறைவனை வழிபாடு செய்தால், ஒரு வருடம் இறைவழிபாடு செய்த பலனை நமக்கு கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே மார்கழி முழுவதும் தவறாமல் இறைவழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் மிகச்சிறந்த பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்த மாதம் மார்கழி மாதமாகும்
இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்ட போது, கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டனர். அப்போது கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியது இந்த மார்கழி மாதத்தில்தான்.
மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி
மார்கழி மாதமானது மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது.
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வளர்பிறை ஏகாதசியில் கொண்டாடப்படுகிறது. திருமாலை வழிபடும் விரதங்களில் இது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவ்விரத வழிபாடு வைகுந்த பதவி என்னும் மோட்சத்தை நல்கும் என்று கருதப்படுகிறது.
நாயன்மார்களின் குருபூஜை
இம்மாதத்தில் 63 நாயன்மார்களில் வாயிலார் நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை நடத்தப்படுகிறது.
ஆண்டாள் திருப்பாவை
விஷ்ணு பகவானை மணக்க, பெரியாழ்வாருக்கு மகளாகப் பிறந்த ஆண்டாள், மார்கழி மாதம் “மார்கழித் திங்கள் அல்லவா…” என்று ஆரம்பித்து, 30 பாசுரங்களை தினம் ஒன்றாகப் பாடி வழிபட்டு மணந்தார் என்பதும் இம்மாதத்தின் சிறப்பு அம்சமாக உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக